"8 வழிச்சாலையை பிரேசில் போல் அமையுங்களேன்..." விவேக் வேண்டுகோள்! - 1 Tech Tamil

Thursday 21 June 2018

"8 வழிச்சாலையை பிரேசில் போல் அமையுங்களேன்..." விவேக் வேண்டுகோள்!


சேலம் - சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பிரேசில்போல் மாற்று ஏற்பாட்டில் பாலமாக போட இயலுமா? என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் - சென்னை இடையே கண்டிப்பாக பசுமை வழிச்சாலை அமைந்தே தீரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 8 வழிப்பாதையாக பசுமை வழிச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய - மாநில அரசுகள் களமிறங்கியுள்ளன.
தாம்பரம், திருவண்ணாமலை, அரூர் வழியாக இந்த புதிய சாலை அமைகிறது. தற்போது சேலம் செல்ல 4 வழிச்சாலைகள் உள்ளன. இவை 330 கிலோ மீட்டர் தூரம் கொண்டவை.
ஆனால் பசுமை வழிச்சாலையின் தூரம் 274 கிலோ மீட்டராக குறையும். அதே போல் பயண நேரமும் வெகுவாக குறையும். தற்போது சுமார் 7 மணி நேரம் ஆகிறது. பசுமை வழிச்சாலை அமைந்தால் பயண நேரம் 3 மணி நேரமாக குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை அமைத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கும். கிராமங்களும் பாதிக்கும் என்பதால் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
இந்த வழித்தடத்தில் உள்ள 8 மலைகளை உடைத்தும் 3 இடங்களில் மலைகளை குடைந்து குகை வழியாகவும் சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் இயற்கை வளங்கள் அழியும் என்று விவசாயிகள், பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் என பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், தேசக்கட்டுமானம் முக்கியம்தான். ஆனால் காடுகள், வயல்கள் அழிவது மக்களுக்கும் விவசாயத்துக்கும் பெரும் அபாயம் அல்லவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரேசில் போல் மாற்று ஏற்பாட்டில் பாலமாக போட இயலுமா? எஎன்றும், இது குறித்து பொறியியல் வல்லுனர்கள் சிந்திக்க வேண்டுகிறேன் என்றும் விவேக் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment